" அனுபவம் "


குறை கூறுவது மனித இயல்பு. நம்மில் குறை கூறாதவர்களே இல்லை எனலாம்.


இருவர் கூடிவிட்டாலே அங்கு இல்லாதவர்களைப் பற்றி பேசுவதுதான் வாடிக்கை. ஏனெனில் அந்த இருவரே ஒருவரையொருவர் குறை கூற துவங்கினால் இறுதியில் கைகலப்பில்தான் முடியும் என்பதால் அங்கு இல்லாதவர்களைப் பற்றி பேசுவது இயல்பு.


ஆனால் நாம் எப்படி மற்றவர்களை குறை கூறுகிறோமோ அதேபோல் மற்றவர்களும் நம்மை குறை கூற வாய்ப்புள்ளது என்பதை நம்மில் பலரும் மறந்துபோகிறோம்!


மற்றவர்களை குறை கூறுவதில் மகிழ்ச்சி காணும் நாம் நம்மை மற்றவர்கள் குறை கூற முயல்கையில் வெகுண்டு எழுகிறோம்.


இதுவும் மனித இயல்புதான்.


குறை கூறுவதும் ஒரு கலை. அதில் கற்று தேர்ந்தவர்கள்தான் தலைமை இடத்திற்கு வரமுடியும் போலிருக்கிறது.


அதாவது நமக்கு கீழே இருப்பவர்களை குறை கூறி, கூறி நம்முள் இருக்கும் குறைகளை நமக்கு மேலிருப்பவர்கள் உணராமல் செய்துவிடமுடியும்!


ஆனால் குறை கூறுவதும் தேவையான ஒன்றுதான்.


No pain no gain என்பார்கள். நம் உடம்பில் உள்ள குறைகளை நாம் கண்டுணர்வது வலியால்தான். சாதாரண வலி என்றுதான் மருத்துவரை அணுகுகிறோம். பிறகுதான் தெரிகிறது வலிக்கு பின்னால் இருக்கும் நோய் (சரிதானே ப்ருனோ?).


அதுபோன்று நம்முடைய செயல்களைக் குறித்து பிறர் விமர்சிக்கும்போதுதான் நம்மில் உள்ள குறை நமக்கே தெரிகிறது. இதை நம்மில் பலரும் மறந்துபோகிறோம்.